Friday 15 December 2023

 



அர்த்தமின்மையின் அழகும் அர்த்தங்களின் மெய்ம்மையும்

திறனாய்வாளர் க.பஞ்சாங்கத்துடன் ஒரு நேர்காணல்

ஆசிரியர் : பா.இரவிக்குமார்

பக்கங்கள் : 80

விலை : ரூ.120/-

வெளியீடு : பரிசல் புத்தக நிலையம், சென்னை 600106

தொடர்புக்கு : 93828 53646 / 88257 67500

--000--

வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை பாதிக்கப்பட்ட எளிமையான மக்களுக்காக இயங்குவதன் மூலமே வழங்க முடியும் என்றும், நாளும் நாளும் புதிய தேடலோடு உயர்ந்துகொண்டே இருப்பவர் என்றும்,..  மேலும் வாழ்க்கையை ஒரு புனைவாகவும், இலக்கியத்தை மொழி விளையாட்டாகவும், வரலாற்றை அதிகாரக் கட்டமைப்பாகவும், திறனாய்வை அரசியல் செயல்பாடாகவும் புரிந்து கொள்வதற்கு பஞ்சுவின் எழுத்துக்களே உதவின என்றும்.. வாழ்க்கை ஒரு அபத்தம் என்ற புரிதல் இருக்கிற அதே வேளையில், வரலாற்றில் இருந்தும், அரசியலில் இருந்தும் விலகிவிட முடியாது என்கிற தெளிவைப் பஞ்சுவின் இந்த நேர்காணல் அளித்திருக்கிறது என்றும்… உச்சத்தில் பஞ்சுவின் நீண்ட பயணத்தில், ஒரு பாதையாகவோ, நிழலாகவோ அல்ல.. ஒரு மணல்துகளாக இருந்திருந்தாலும் அதுவே எனக்குப் பெருமை என்று தனது முன்னுரையில் பேரா.க.பஞ்சு குறித்து பேரா.பா.ரவிக்குமார் கூறுகிறார். பேரா.பஞ்சு குறித்த அவரது ஆழமான புரிதல்  மற்றும் அன்பின் வெளிப்பாடாகவே இவ்வரிகளைக் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. பேரா.பஞ்சுவிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அவரது அர்த்தம் பொதிந்த பதில்களுமே இந்நூல்.

குழு சார்ந்து பயணிக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்விக்கு சின்ன வயதில் காணப்பட்ட எதிலும் கலந்து கிடக்கும் போதாமையையும் பற்றாக்குறையையும் எளிதில் கண்டு கொள்ளும் புத்தி, இன்றும் தொடர்வதாகவும், அதிகாரத்தின் சூடு படாமலேயே வளர்ந்த  ஒரு சிறுவன் எதையும் எளிதாகக் கேள்வி கேட்டுவிடக் கூடிய மனநிலை அடைவது இயல்பு போல எந்தக் குழுவிற்குள்ளும் எந்தவொரு சித்தாந்தத்திற்குள்ளும் நிரந்தரமாகத் தங்கவிடாமல் என்னைத் தேடல் நோக்கி விரட்டிக் கொண்டே இருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.

மார்க்சியத்தின் வாடை உங்கள் முதல் நூலான ஒட்டுப்புல் தொடங்கி இன்று வரை நிறைந்திருக்கிறதே என்ற கேள்விக்கு எழுத்துக்களின் வாசிப்பு, எனக்குள் உருவாக்கிய ஆழமான பாதிப்பு, இன்றுவரை எனக்குள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. மானுட சமூகத்திற்குள் நிலவும் வறுமை, அதன் காரணமாகச் சமூக வாழ்விலும் தனிமனித வாழ்விலும் நடந்தேறும் துக்கங்கள், இழிவுகள் சீரழிவுகள், சின்னத்தனங்கள் எல்லாம் என்னைப் பெரிதும் பாதித்த வண்ணம் இருக்கின்றன என்கிறார். மேலும் மானுட சமூகத்தின் அனைத்துத் துக்கங்களுக்கும் காரணம் இந்த வறுமைதான் என்றும் வறுமைக்குக் காரணம் மூலதனக் குவியல்தான் என்று மார்க்சியம் மட்டும்தான் தர்க்கபூர்வமாக விளக்கி நிலைநிறுத்தியது என்பதால் இன்றைக்கும் என் எழுத்தை இயக்கும் ஆதார சக்தியாக இருப்பது மார்க்சிய சித்தாந்தாம் தான் என்று குறிப்பிடுகிறார். உற்பத்தியைக் குவிக்கும் இராட்சச எந்திரங்களின் காலத்திலும் மனித சமுதாயத்தில் கால்வாசிக்கும் மேலானோர் பட்டினியால் கிடந்து மடிகிறார்கள் என்ற உண்மை என்னைப் படுத்துகிறது என்கிற வரிகள் சமூகம் குறித்த இவரது கவலையை பதிவு செய்கிறது.

            மார்க்சிய அமைப்புகளோடு உங்களை இணைத்துக் கொள்ளாதது குறித்துக் குறிப்பிடும் போது எதிலும் போதாமையை எளிதில் கண்டு கொள்ளும் என்னைப் போன்றவர்களால் அமைப்புக்குள் இணைந்து செயல்பட முடியாமல் போய்விடுகிறது. கூடவே அமைப்பிற்குள் இருந்தால்தானா? வெளியே இருந்தும் அந்தச் சித்தாந்தத்திற்கு முடிந்த அளவு துணை நிற்க முடியாதா என்ற எண்ணமும் உருவாகி

--2--

 

விடுகிறது … எந்த அதிகாரத்திற்குள்ளும் இருந்து பழக்கமில்லாத எனக்கு இப்படி வெளியே இருந்து இயங்குவதுதான் வசதியாகப்படுகிறது. சில பேருக்கு அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து போகவும் தெரியும். அதே நேரத்தில் எப்படி அதிகாரத்தைக் கைப்பற்றுவது, கொண்டு செலுத்துவது என்பதும் தெரியும். எனக்கு இந்த இரண்டுமே தெரியாது. இரண்டும் கைகூடி வருகிறவர்கள்தான் அமைப்பிற்குள் தொடர்ந்து இருக்கிறார்கள் என்பது என் அனுமானம் என்கிறார். இந்த வரிகளை அப்படியே ஏற்றுக் கொள்வது இயலாது என்பது தான் நடைமுறை எதார்த்தம்.

            திமுக ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்ததை “பெரிய வினையாகப் போய் விட்டது போல் தோன்றுகிறது என்றும், காசும், அதிகாரமும் தனிமனிதர்களை மட்டுமல்ல, ஓர் இயக்கத்தையும் எப்படி சீரழித்துவிடும் என்பத்ற்குத் திமுக இயக்கம் ஓர் எடுத்துக்காட்டு என்று குறிப்பிடுகிறார். தேசிய அரசியல் பாசிசத்தை கொண்டு வந்து விடுமா என்ற கேள்விக்கு அதை பொதுமைப்படுத்த முடியாது என்றும் அவ்வாறு வளர்வதற்கு பேரினவாதத்தின் கொடூரமான ஒடுக்குமுறை அரசியல் காரணம் என்றும் ஒடுக்கப்பட்டு ஒன்றுமில்லாமல் ஓரினம் அழிக்கப்படுவதை ஒரு போதும் ஒத்துக் கொள்ள முடியாது என்று பதிலிறுக்கிறார்.

            உயர்கல்வித் துறையில் மாணவர்களைச் சமைக்கும் சமூகத்தின் இன்றியமையாத பங்ககளிப்பை நிகழ்த்த வேண்டிய பேராசிரியர்கள் தேங்கிப் போய் கிடந்ததால் பல்கலைக்கழக நிதிக்குழு புதிய புதிய அறிவுவளத்தை கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்கிற நோக்கோடு சம்பளத்தோடு மூன்று ஆண்டுகள் விடுமுறையைக் கொடுத்து முனைவர் பட்டப் படிப்பை தொடர ஊக்கப்படுத்தியதை குறிப்பிட்டு அதனால் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பட்டம் பெற ஓடத் தொடங்கினார் என்கிறார். சிலப்பதிகாரம் ஒரு தொன்மக் கதை என்பதைக் கேள்விப்பட்டு தொன்மம் என்றால் என்ன என்று தேடத் தொடங்கியதையும் அதன் தொடர்ச்சியாக கோட்பாடுகள் குறித்த தேடல் தொடர்ந்தததையும் சொல்கிறார்.

            தமிழ்த்துறைகள் குறித்துக் கூறும் போது காலத்திற்கேற்ப நவீனத்துவத்திற்குள் இன்னும் காலெடுத்து வைக்கவில்லை என்றும் வெறுமனே அந்தந்த மதம் சார்ந்த மடங்களுக்குரிய பண்போடு தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதுதான் மிகப்பெரிய வேதனை என்றும் மிகச் சரியாகக் குறிப்பிடுகிறார். மேலும் கோட்பாடுகளுக்கு வறுமை ஏற்படாமல் இருக்க மொழிபெயர்ப்பு கழகங்களை உருவாக்கி, ஆங்கிலத்தில் பிரஞ்சில் உள்ள இலக்கியக் கோட்பாடுகளை மட்டுமல்ல, ஜெர்மன், ஜப்பான், சீனா, துருக்கி, ஸ்பெயின், ஈரான் ஆப்ரிக்கா என்று எல்லா நாட்டிலும் நடந்து கொண்டிருக்கும் இலக்கியக் கோட்பாட்டு நூல்களை தமிழில் மொழிபெயர்த்துக் கொடுக்க வழிவகை செய்ய வேண்டுமென்கிறார்.

வள்ளுவரும் பாரதியாரும் தொலைக்காட்சி மூலம் இப்படி தாங்கள் லட்சக்கணக்காகச் சம்பாதிக்கப் பயன்படும் ஒரு மேடைப் பேச்சுக்கான பொருளாகிப் போவோமென்று நினைத்துப் பார்த்திருப்பார்களா என்று கடுமையாக மேடைப் பேச்சாளர்களை சாடுகிறார். ஒருவரின் எழுத்து வெகுவாக வாசிக்கப்பட வேண்டும் என்றால் எழுத்திற்கு வெளியே வெகுஜன ஊடகங்களால் பெரிதும் பேசப்படும் ஒருவராக உங்களை உருவாக்கிக் கொள்ளும் பலவிதமான் தந்திரங்களை மிகவும் நுண்ணிய தளத்தில் நிகழ்த்திக் காட்டக் கூடிய சாமார்த்தியம் மிக்கவராக நீங்கள் இருக்க

--3--

வேண்டும் என்று கோடிட்டுக் காட்டுகிறார். இவ்வரிகளில் பின்னால் “பொருள் பொதிந்”திருப்பதை புரிந்து கொள்ளலாம். ஒட்டுப்புல் கவிதை நூல் குறித்துக் குறிப்பிடும் போது சரியாக ஓராண்டு பத்துநாள் என்னோடு வாழ்ந்த துணை, ஒரு நாள் மாலையில் ரத்தவாந்தி எடுத்து மடிந்த பிரிவு நெருப்பை கவிதை எழுதி அணைக்க முயன்றேன் என்று வருத்தத்தோடு குறிப்பிடுகிறார்.

கவிதை குறித்த இவரது சொல்லாடல் மிகவும் ரசிக்கத்ததக்கது. அகத்திற்குள் தன்னெழுச்சியாகக் கணநேரச் சிலிர்ப்புப் போல வருகிற வார்த்தைக் கோலங்களை அப்படியே நாட்குறிப்பில் எழுதி வைத்துக் கொள்ளுகிற பழக்கம் உடையவன் நான். நம் அகத்தீயை ஊதிப் பொறியைக் கிளப்பக்கூடிய நூலொன்று கிடைத்த வெறியோடு வாசிப்பில் ஈடுபட்டிருக்கும்போது, கழிவறையில் அமர்ந்திருக்கும்போது பயணத்தில் இருக்கும்போது, காலை நடையில், குளியலறையில், காலை நேர அரைத் தூக்கத்தில் அல்லது தூங்குவதற்குக் கண்ணை மூடிக் கொண்டிருக்கும் போது கவிதை வரும். கவிதை ஒரு விசித்திரமான பிறவி. பெரிதும் அது அக உலகப் பயணத்தில் பிறப்பெடுப்பது என்று மிகச் சரியாக குறிப்பிடுகிறார். பலரின் கவிதை உருவான அனுபவம் அப்படியாகத் தான் இருக்கிறது.

பாரதியார் குறித்த இந்துத்துவா பார்வை குறித்துச் சொல்லும் போது ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உச்சபட்சத் தந்திரங்களோடும் பாதுகாப்பு வளையங்களோடும் கட்டமைக்கப்பட்டுத் தொடர்ந்து வினை புரிந்து கொண்டிருக்கும் ஒரு வைதீகச் சாதியச் சமூகத்தில், சாதி அடையாளத்தோடு மட்டுமே பிறந்ததில் இருந்து வாழ நேரும் எந்த ஒரு மனிதரும் முழுமையாகச் சாதிய உணர்விலிருந்து வெளியே குதித்துத் தனி ஒரு மனிதராக மலர்ந்து விட்டார் என்று யாரையும் இங்கே கூறிவிட முடியாது என்று சுட்டிக் காட்டும் அதே வேளையில், பாரதியாரின் “தண்டச் சோறு தின்னும் பார்ப்பான்”, “ஏது செய்தும் காசு பேறப்பார்ப்பான்” ஆகிய கவிதை வரிகளைச் சுட்டிக் காட்டுகிறார்.

திரைப்படம் இலக்கிய குறித்து பேசும் போதும் காட்சி ஊடகத்தை விட மொழியாலான இலக்கிய ஊடகம் தான் வாசிப்பவனுக்கான சுதந்திரம் மிக்க வெளி என்று கருதுவதாகவும், காட்சி வடிவம் வாசகரின் சுய கற்பனைக்கு இடமில்லாமல் செய்து விடுகிரது என்றும் ஆனால் மொழி வடிவம் வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கற்பனை உலகைத் திறந்து விடுகிறது என்கிறார். தத்துவ அறிஞர்கள் அல்பெர் காம்யூ, பெட்ரண்ட் ரஸல், நோம் சோம்ஸ்கி, மிஷல் ஃபூக்கோ, தெரிதா. அந்தோணியோ கிராம்சி, சார்வாகனர், புத்தர் ஆகியோர்களின் நூல்களைத் தேடிப் படித்ததையும் குறிப்பிடுகிறார்.

ஈழப் போரில் பிரபாகரனின் தோல்வி மனதிற்குள் ஆற்றவே முடியாத பெருந்துன்பத்தை பெருக்கியவாறு இன்றும் தொடர்வதாகவும் பத்து லட்சத்திற்கும் மேலான தமிழ் சொந்தங்களைப் பலி கொடுத்தும் தமிழினத்திற்கென்று ஒரு குட்டித் தேசிய நிலப்பரப்பு அமையாமல் போனதே என்ற சோகம் சாகும் வரை தீவிரம் குறையாமல் தொடரும் என்றும் ஏக்கத்தோடு குறிப்பிடுகிறார்.

தனது ஆசிரியப்பணி குறித்துக் குறிப்பிடுகையில் காரைக்காலில் தனது மாணவர் ஒருவர் தன் பெயரை பச்சை குத்திக் கொண்டதையும், தற்கொலை செய்து கொள்ளச் சென்ற மாணவர் தன்னை நினைத்து மனம் மாறி திரும்பி வந்ததையும், சிங்கப்பூரில் தனது மாணவர் ரத்தினமாலா பணி புரிந்து வருவதை நேரில்

--4--

கண்டதையும், தன்னிடம் பயின்ற மாணவர்கள் குமார், மனோகரன், சியாமளா, விசாலாட்சி, ஸ்ரீவித்யா, என்று பேராசிரியர்களாக பல இடங்களில் பணி புரிவதை பெருமையுடன் குறிப்பிடுகிறார்.

அறிவின் அல்லது புரிதல் திறனின் அடையாளமே கலைச் சொற்களைக் கைப்பற்றுவதும், வரிசைப்படுத்தி வகைப்படுத்துவதிலும் தான் இருக்கிறது என்கிறார். நிகழ்கால அரசியலை “ஆழக்குழி தோண்டிப் புதைக்க வேண்டிய சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் கடைப்பிடிக்கப்பட்ட பழைய குப்பைகளை எல்லாம் “ஏங்கள் தேசியப் பண்பாடு” எனப் புனைந்து மகிழ்வது பழைய நிலவுடைமைச் சமூகக் கொடுமைக்கே நம்மைக் கொண்டு சென்று விடும்” என்று சரியாகச் சாடியிருக்கிறார்.

ஒரு நேர்காணல் எப்படி அமைய வேண்டும், கிடைக்கும் வாய்ப்பினை எப்படி மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இந்த நூலை குறிப்பிடலாம். இதற்காக திட்டமிட்டு பணியாற்றி அழகிய வடிவியலில் கொணர்ந்தமைக்காக பேரா.பா.இரவிக்குமார் அவர்களை மனதாரப் பாராட்டலாம். நூலை பேரா.பஞ்சுவின் துணைவியார் திருமதி.பிரபாவதி அவர்களுக்கு சமர்ப்பித்திருப்பது இன்னும் சிறப்பு.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.. என்றாலும் முழுமையாக படித்துணரும் போது தான் தேனில் ஊறிய பலாச்சுவையை நம்மால் உணர முடியும். இது வெறுமனே கடந்து செல்லும் நூல் அல்ல. நம்முள் இந்த நூல் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தும் என்றால் அது மிகையல்ல.

 

-       புதுச்சேரி லெனின்பாரதி.

 

 

Saturday 22 May 2021


நூல் அறிமுகம்

தறியுடன்

ஆசிரியர் : இரா.பாரதிநாதன்

பக்கங்கள் : 780

விலை ரூ.650/-

வெளியீடு : பொன்னுலகம் பதிப்பகம், 4/413 மூன்றாவது வீதி, பாரதிநகர்,

                           பிச்சம்பளையம் (அஞ்சல்), திருப்பூர் 641603. கைபேசி : 94866 41586

--00--

            ஒரு தேசபக்த வீரனின் மரணத்தை இயற்கை எப்படிப் பார்க்கிறது…

“ வானம் பலநூறு கண்களால் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. மேகங்கள் அப்படியே உறைந்து போய் விட்டன. காற்று மட்டும் மெளன சாட்சியாய் சுற்றிச் சுற்றி வந்தது. தாமதமாக வந்த பாதி நிலவு நட்சத்திரக் கூட்டத்தை அவசரமாய் விலக்கி எட்டிப் பார்த்தது. அதன் மீதி முகமும் கறுத்துவிட்டது… எந்த செயற்கைகோளிடம் போய் இந்த குரூரத்தைப் படம் பிடித்து ஊரேல்லாம் அனுப்பக் கூறி உதவி கேட்பது. அதன் பரிபாஷை தான் என்ன? கழுத்து அறுபட்டவனின் ரத்தம் பூமியை சேறாக்கியிருந்தது. தாவரங்களின் மேல்பட்ட குருதி சொட்டு சொட்டாய் வடிகிறது. பெளதீக பொருட்களனைத்தும் கையறு நிலையில் கலங்கி நிற்கின்றன. இந்த அவலத்தை காணச்சகியாமல் வானத்தை கறுந்திரையால் மூடுகிறது மேகம். இடியும் மின்னலும் வந்து ஆர்ப்பாட்டம் செய்கின்றன. சடசடவென விண்ணிலிருந்து பெருக்கெடுத்து வருகிறது மழை. இறந்தவனின் உடலுக்கு சரம்சரமாய் கொட்டி மலர் வளையம் வைக்கிறது. விடியும் வரை எந்த விலங்கும் அவனை தீண்டக்கூடாதென்று பாதுகாப்பாய் நீர் அரண் அமைக்கிறது. மழை நீரோடு கலந்த பிரட்சியாளனின் குருதி, மோரி வழியாக வயற்காட்டுக்கு போகிறது..நாளை விளையும் பயிரில் இரத்தம் மணக்குமோ ? தானியம் உண்ட தாயின் முலைக்காம்பில் வீரம் சுரக்குமோ… பூமித்தாய் தன் மகனுக்கு மணி பூசி குளிப்பாட்டியிருக்கிறால்.  குடம் குடமாய் மழைநீர் கொண்டு வந்து கொடுத்திருக்கிறது. அணிந்திருந்த வேட்டி, சட்டை விலகி செடி கொடியும் அருகம்புல்லும் ரங்கன் உடம்புல் புத்தாடையாய் போர்த்தப்பட்டிருந்தது. மனிதர்கள் யாரும் வரும் முன்னால் ஈமச்சடங்கை இயற்கை முடித்துவிட்டு, ஆடாமல் அசையாமல் மெளன அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தது”

            ஒரு சாதாரண தறி நெய்யும் தொழிலாளி ஒரு புரட்சிகர கட்சித் தோழர்களுடன் தொடர்பு ஏற்பட்டு, வேண்டா வெறுப்பாக முதலில் பழக ஆரம்பித்து பின்னர் கொள்கை கவ்விப் பிடிக்க எப்படி மக்களோடு மக்களாக கலந்து சமுதாயத்திற்காக தனது வாழ்க்கையையும், உயிரையும் பணயம் வைத்து வாழ்ந்து காட்டினான் என்பதே கதை. நாவல் விறுவிறுப்பாக எழுதப்பட்டிருக்கிறது. அதுவும் கதாபாத்திரங்களோடு நாமும் இணைந்து பயணிக்கிறோம். அவர்களின் சந்தோஷம், துக்கம் , வேதனை, போராட்டம் அனைத்திலும் நாமும் பங்கு கொள்கிறோம். இந்த நாவலில் கதையோட்டத்திற்கு அடுத்தபடியாக எனக்கு மிகவும் பிடித்ததும் நான் மிகவும் ரசித்ததும் வர்ணனைகள் தான். அதற்காகவே தோழர்.பாரதிநாதனுக்கு ஒரு சபாஷ் சொல்ல வேண்டும். மனுஷன் ரசித்து ரசித்து எழுதியிருக்கிறார்.  அந்த வர்ணனைகளை நீங்களும் படித்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே இங்கு படையலிடுகிறேன்…

வடக்கிலிருந்து வந்த காற்று துவம்சம் செய்தபடியே தென்கிழக்கே பயணப்பட்டது. வழியில் கரட்டு முனியப்பன் சாமியின் சிலை முன்பு நின்று சில நொடிகள் பேயாட்டம் ஆடியது. கனத்த மீசையுடன் முனியப்பன் இதை ஆக்ரோஷமாய் பார்த்துக் கொண்டிருந்தார்.” (பக்கம்-17 )

“பெண் சிசுக்களை நெல்லோ, கள்ளிப்பாலோ கொடுத்து கொன்று விட்டால் எங்கிருந்து கல்யாணத்துக்குப் பெண் கிட்டும். பெண்ணால் உருவான சமூகம் அவளுக்கு எதிராகத்தான் இருக்கிறது. இத்தனைக்கும் மாரியம்மான், காளியம்மன், கன்னியம்மன், திரெளபதியம்மன் என்று இங்கே ஏகப்பட்ட பெண் தெய்வங்கள். எந்த சாமியும் ஏன், இவர்களை ஒன்றும் செய்யாமல் இருக்கிரதென்று தெரியவில்லை” (பக்கம்-19).

“ஊழைப்பவன் எப்போதும் போதையில் இருந்தால்தான் தன்னை எதிர்த்து கேள்வி கேட்க மாட்டன் என்ற கொடூர எண்ணம் அரசாங்கத்துக்கு” (பக்கம்-51)

“பாதையின் இருபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் மேட்டாங்காடு வெறிச்சென்றிருந்தது. சமீபத்தில் ஏர் கலப்பை விழாத குறை காடு. எப்போதோ வேர் கடலை மகசூலை முடித்துவிட்டு காய்ந்த செடிகளை ஆங்காங்கே குத்தாரி போட்டு வைத்திருந்தார்கள். மண்ணின் தாகத்திற்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் பெய்த மழை போதாமல், நிலம் நாக்கு வறண்டு போயிருந்தது. கொஞ்சமாய் காக்கைகள் தெரிந்தன. மண்ணில் உட்கார்ந்து தப்புக் கடலையைக் கண்டுபிடித்து நோண்டி தின்று கொண்டிருந்தன” (பக்கம்-63)

“எங்கெல்லாம் அறியாமை நீடித்திருக்கிறதோ, அவ்விடத்தில் பகுத்தறிவு பலவீனப்பட்டே கிடக்கிறது” (பக்கம்-76)

“ஆள்வோர் தங்களை நவீனப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அடக்குமுறையும், சுரண்டலும் தன் வடிவத்தை மாற்றிக் கொண்டு இன்னும் நீடிக்கிறது. ஆனால், உழைக்கும் மக்களின் பரிதாபம் மட்டும் மாறாமல் ஓட்டுப்பெட்டிகளின் கீழே நசுங்கிக் கிடக்கிறது” (பக்கம்-114)

“ கல்லூரிகளுக்குள்ளேயே மாணவர்களைச் சுரண்டும் நிர்வாகம், சாதி வெறி, தங்கும் விடுதியில் போடப்படும் தரமற்ற உணவு, சுகாதாரக் குறைபாடுகள் இன்னும் பல கொடுமைகளுக்கு எதிராய் மாணவ மாணவியர் போராடுவதைப் பற்றியெல்லாம் எந்த சினிமாவும், கதைகளும் ஏன் சொல்வதில்லை.. வெறும் காதலையும், அதன் தோல்வியையும் பற்றியும் பேசி கல்லூரியென்றாலே இப்படித்தான் என்று அறுதியிடுவது கூட ஒரு வியாபார நோக்கம் தான்… எதிலும் காசு பார்க்க நினைக்கும் முதலாளிகள், அவர்கள் தயவில் ஆட்சி நடத்தும் அரசியல்வாதிகள் என ஒரு சிறு கூட்டம் மக்களை ஏய்க்கிறது. அவர்கள் நலனுக்காகவே எல்லா தொழில்களும், ஊடகங்களும் சேவை செய்யுமாறு நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. மாணவனும் சரி, மக்களும் சரி, தங்களுக்கான வாழ்க்கையை, பண்பாட்டை மீட்டெடுக்கப் போராடாவிட்டால், எல்லா அபத்தங்களும் வருங்காலத்தில் வாழப்போகும் சந்ததியினரையும் சேர்த்து முட்டாளாக்கும் அறியாமையை ஆழமாக விதைக்கும்” (பக்கம்-121 & 122)

“எளியோரை வலியோர் அடித்தால், வலியோரை தெய்வம் அடிக்கும் என்று பள்ளிக்கூடத்தில் சொன்னார்களே, அது எந்த தெய்வம் ? இவ்வளவும் நடந்தும் அந்த தெய்வம் ஏன் வரவில்லை ? (பக்கம்-147)

“ஓரு அரசியல் அடிப்படையில் கட்டப்படாவிட்டால் எந்த ஒரு தொழிற்சங்கத்தையும் நடத்த முடியாது. விதிவிலக்காக கொஞ்சநாள் தாக்குப் பிடித்தாலும் கடைசியில் அது பின்னடைவைத்தான் சந்திக்க நேரிடும் …” (பக்கம் – 196)

“ஓரு பகுத்தறிவாளனுக்கு அடிப்படைத் தகுதியே கேள்வி ஞானம் தான். அந்த அறிவுதான் அவனை புரட்சிக்காரனாக நிறம் மாத்துது.” (பக்கம் – 216)  

“மக்கள் புரட்சியாளர்களைப் பார்த்து அஞ்சுவதில்லை. மாறாக தாங்கள் அவர்களை

பாதுகாக்க கடமைப்பட்டவர்கள் என்பதை மிக துல்லியமாக உணர்ந்தே இருக்கிறார்கள். தொப்புள் கொடி உறவாக நேசிக்கிறார்கள். உழைக்கும் மக்கள் தாங்கள் உண்பதையே, போராளிகளுக்கும் தருகிறார்கள். எனவே, அவர்களும் புரட்சியாளர்களும் நகமும் சதையுமாய் இணைந்தே எப்போதும் இருக்கிறார்கள்..” (பக்கம் – 218)

“ஒருவன் மார்க்சிய உலகாயுதத்தைக் கற்றுக் கொண்டால், அவனுக்கு சமுதாயத்தில் நகழுகின்ற ஒவ்வொரு செயலுக்குப் பின்னணியும் மிகச் சரியாகத் தெரிந்துவிடும் “ (பக்கம் – 247)

“குடிக்கவும், டீ வாங்கவும் ஒரே சொம்புதான் உபயோகப்படும். இன்னும் கூட ஒருசில தறிப் பேக்டரிகளில் குடிக்க தண்ணீர் வைப்பதில்லை. எவன் விக்கிக் கொண்டு செத்தால் என்ன, தான் நன்றாக இருந்தால் போதும் தன் மனைவி மக்கள் சுகப்பட்டால் போதுமென்ற முதலாளித்துவ மனோபாவம் தனக்கு லாபத்தை ஈட்டித்தரும் தோழிலாளிகள் மீது துளியும் அக்கறை கொள்வது இல்லை” (பக்கம் - 275)

“இயக்கத்தின் முன்னணித் தோழர்கள் யாருக்கும் குடிப் பழக்கம் அறவே கிடையாது. அப்படி யாராவது சாராயம் குடித்தால் பொறுப்புக்கு வரவும் முடியாது. இது இங்கு மட்டுமல்ல, இந்தியா முழுக்கவே நக்சல் பாரி அமைப்பில் இந்த கட்டுப்பாடு மிகவும் கறாராக கடைப்பிடிக்கப்படுகிறது” (பக்கம் – 289)

“வரும் மழையை காற்று விரட்டி விடும் போல இருந்தது. இருப்பினும், வந்தே தீருவேன் என்று மழை மேகங்கள் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தது. எந்த தரப்பு யுத்தகளத்தில் வெற்றி பெறும் என்பதை நிலவு ஒளிந்து நின்று ஆவலுடன் எட்டிப்பார்த்தது. அதில் அச்சமிருந்தது. தெருவில் கட்டிப்புரளும் இரு சண்டைக்காரர்களுக்கு பயந்து போய் இளம் பெண் ஒருத்தி பார்ப்பது போலத் தோன்றியது” (பக்கம் – 311)

“இருளில், ஒவ்வொரு தென்னை மரமும் உயரத்தில் தலை விரித்தாடுவது போலத் தெரிந்தது. மேற்கு மூளையில் அகலமான கிணறு கன்னங்கரேலென்று பெரிய யானையைப் போல படுத்திருந்தது. இன்னொரு பக்கம் பார்த்தால், ராட்சசன் ஒருவ்ன இளைப்பாறிக் கிடப்பது போன்று தோன்றியது. அதன் பக்கத்தில் பயந்த சுண்டெலியாய் நீர் இறைக்கும் சிமெண்டு தொட்டி. கிணற்று மேட்டில் கயிற்றுக் கட்டில்.” (பக்கம் – 315 )

“அரசியல் வேலை செய்வதென்பது இயந்திரத்தனமானது அல்ல. அதற்கு நிறைய நெளிவு சுளிவுகளும், ஒரு விதமான நாசுக்கும் வேண்டும். இடம், பொருள் பார்த்து எதையும் சொல்லி மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். தன் மூளையில் இருப்பதை அடுத்தவர்க்கு திணிக்கக் கூடாது. அதே சமயம், எளிதில் புரியாத அரசியல் வார்த்தைகளை கூறி பயமுறுத்திக் கொண்டிருக்க கூடவே கூடாது” ( பக்கம் – 323)

“காவல் நிலையத்திற்கு எட்ட நின்று நீதியும், நியாயமும் கைகொட்டிச் சிரித்தது. வானத்தில் காக்கை, குருவியைக் கூட காணவில்லை. சாலையில் பள்ளி செல்லும் சிறுவர்கள் திரும்பியே பாக்காமல் காவல்நிலையத்தை தாண்டி பயந்து ஓடினார்கள். எதிரே இருந்த பெருமாள் கோயில் மூலவர் முதுகை காட்டிக் கொண்டு அமர்ந்திருந்தார்” (பக்கம் – 355)

“ஆணைப் படிக்க வைத்தால், அது அவனுக்கு மட்டுந்தான் பயன். பெண்ணை படிக்கவைத்தால் ஒரு குடும்பத்துக்கே பலன். அதிலும் இவர்கள் சமூக சிந்தனை உள்ளவர்கள்.” (பக்கம் – 452 )

“இரவோ, பகலோ எல்லா தாவரங்களும், ஜீவராசிகளும் தான் உயிர் வாழ்வதற்கான போராட்டத்தை நடத்திக் கொண்டேயிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் இயங்கும் பொருட்கள், பிராணிகள், மனிதர்கள் எல்லவற்றுக்கும் உயிரே போராட்டம்தான். எந்த ஒன்று இறந்து போனாலும், அது தன் போராட்டத்தை நிறுத்திவிட்டது என்றுதான் அர்த்தம்.” (பக்கம் – 492 )

“கிழடு தட்டிப் போன சுரண்டல் அரசாங்கத்தின் அந்திம காலத்தைப் போல முனியம்பட்டி – இருப்பாளி புறவழிச் சாலை பொத்தலாகிக் கிடந்தது. அது தார் சாலை இல்லை. வெறும் மண்ரோடுதான். குண்டும் குழியுமாய் கால் நடைகளே பாதம் வைக்க யோசிக்குமளவுக்கு அவலநிலை காட்டியது… விடியற்காலை நேரம் இருளை விரட்டப் போராடிக் கொண்டிருந்தது. தன் சிம்மாசனத்தை இழக்க விரும்பாத முதிய அரசனாய் இருட்டு அழுது அடம் பிடிப்பதாய் தோன்றியது” ( பக்கம் – 503)

“சுரண்டல்வாதிகளுக்கு என்றுமே உண்மையான அன்பு, பாசம் இருந்ததில்லை. பெற்றோரே ஆயினும், தங்களுக்கு எந்தவிதத்திலும் பயன்படாவிட்டால், அவர்களை விஷம் வைத்து கொல்லவும் தயங்க மாட்டார்கள். கொன்று விட்டு செத்தவனுக்குப் பொன்னாடை போர்த்தி தங்கள் பகட்டை காட்டிக் கொள்வார்கள்” ( பக்கம் – 527)

“விடிவதற்கு வழிகாட்டுவது போல காலையின் உற்சாகத்தோடு பறவைகள் கத்தியபடி திரிந்தன. அதனதன் மொழியில் விதவிதமாய் குரலெடுத்து வருகின்ற பொழுதை வரவேறறன. அதைப் பார்க்கையில் வாழ்க்கை தன்னம்பிக்கை நிறைந்ததாய் தோன்றியது. எல்லா இருட்டும் வெளிச்சத்தில்தான் முடிகிறது” (பக்கம் – 531)

“ஏப்படிப்பட்ட ஊனம் ஏற்பட்டாலும் மனிதன் தன் வாழ்தலுக்கான போராட்டத்தை எதிர் கொள்ளவே செய்கிறான். கண்கள் இல்லாதவர்களும், கால்கள் சூம்பி போனவர்களும் இந்த உலகத்தில் போராடி வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள். வாழ்தலே எல்ல உயிரினங்களுக்கும் ஒரே நோக்கமாய் இருக்கிறது. இதில், மனிதன் மட்டுமே தன் சுயகெளரவத்தை மேம்படுத்திக் கொள்ள பிரயத்தனப்படுகிறான். மனிதனை மனிதன் சுரண்டும் இழிநிலையை வேரறுக்க யுத்தம் செய்கிறான்” (பக்கம் – 544)

“கைது என்பதும் கைதிகள் என்று சொல்லப்படுவதுஜ்ம் மானுடத்திற்கு எதிரானது. எனவே, இங்கே இருப்பவர்களை சிறைவாசிகள் என்றுதான் அழைக்க வேண்டும். கிராமவாசி, நகரவாசி என்பதைப் போல் சிறையில் வசிப்பவர்கள் சிறைவாசிகள்தான்” (பக்கம் – 642)

“சமூக உறவில் யாருக்கு யார் வாரிசென்பதை சொந்த இரத்தம் தீர்மானிப்பதில்லை.  வர்க்க அடித்தளத்திலிருந்து எழும் உன்னத லட்சியங்களே தீர்மானிக்கின்றன. அந்த வகையில் பார்த்தால் புரட்சியாளர்களுக்கு அவர்களின் முன்னோடிகளே தாய், தந்தையராய் ஆகிறார்கள்” (பக்கம் – 670)

“இப்ப நானு மறுபடியும் முழுகாம இருக்குறேன். புரட்சிக்குக் கொடுக்க எனக்கு இன்னொரு உசுரு இருக்குது …” என்று கம்பீரமாகச் சொன்னாள்…” (பக்கம் – 676)

“வெறும் அலங்கார பொம்மைகளாக இருக்க என்றுமே பெண்கள் விரும்பியதில்லை. சமூகத்தில் அவர்கள் பங்கு படுக்கைக்கும், தொட்டிலுக்கும் மட்டும் உரியது அல்ல. உண்மையில், ஒரு சமூக உருவாக்கமே பெண்ணில் இருந்துதான் தொடங்கியது. பெண்தான் தன் குழந்தைகளுக்கு உணவு தேடித் தந்தாள். காட்டில், பழங்கள் பறித்துக் கொடுத்தாள். கொடிய விலங்குகளை தானே முன் நின்று வேட்டையாடினாள். கண்ணின் இமை போல தன் சந்ததியைக் கட்டிக்காத்தாள். பின்னால் வந்த தனியுடமை ஆணின் கொடூர புத்தி அவளை அடிமையாக்கி விட்டது” (பக்கம் – 702)

“களவொழுக்கம் என்பது பாட்டாளி வர்க்க கலாச்சாரத்தில் என்றும், எப்போதும் அனுமதிக்கப்படக்கூடிய ஒன்றல்ல.. அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, தான் விரும்பிய நபரோடு வாழ இரு தரப்புக்கும் உரிமை உண்டு. ஆனால் தன்னை நம்பி வந்த வாழ்க்கைத் துணையை வைத்துக் கொண்டு, திருட்டுத்தனமாய் உறவு கொள்வது நிச்சயமாய் கலாச்சார சீர் கேடு” (பக்கம் – 721)

“மாதவி வீட்டுக்குப் போன கோவலன் திரும்பி வருகிற வரை காத்திருந்தாள் கண்ணகி என்றெல்லாம் காவியங்கள் எழுதி பெண்ணடிமையை நியாயப்படுத்த முடியாது. தனியுடமைக்கு காவல் நிற்கின்ற இந்த காப்பியங்கள். ஒருவனுக்கு ஒருத்தியென்று சொல்லி வைத்தவர்கள் களவோழுக்கம் செய்யும் ஆணுக்கு என்ன தண்டனையென்பதுப் பற்றி கூறவே இல்லை” (பக்கம் – 722)

“கையில் கத்தியுடன் முனியப்பன் சிலை முறைத்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது. எந்த தலைமுறையிலோ மனித இனத்துக்காகப் போராடிய ஒரு வீரனின் அடையாளம் இது” (பக்கம் – 750)

            இந்த நாவல் தான் பல மாற்றங்களுடன் “சங்கத்தலைவன்” திரைப்படமாக மலர்ந்திருக்கிறது. ரங்கன் கதாபாத்திரத்தில் கருணாசும், சிவலிங்கம் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும் வாழ்ந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அனைத்து கதாபாத்திரங்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். திரு.பாரதிநாதன் திரைக்கதையை கச்சிதமாக வெட்டி சேர்த்து மெருகூட்டியிருக்கிறார். இருந்தாலும் நாவல் படிக்கும் போது ஏற்பட்ட மகிழ்ச்சி, கோபம், வேதனை, துக்கம், துயரம், எல்லாம் திரைப்படத்தில் இல்லை என்பது என் வரையில் ஒரு ஏமாற்றமே. இரண்டவாது நாவலை முழுமையாக படமாக்குவது என்பதும் இயலாது.

            ஒரு நாவலைப் படித்தால் நீண்ட காலத்திற்கு நம்மை தூங்க விடாது துரத்திக் கொண்டே இருக்க வேண்டும். நாம் பார்க்கின்ற மனிதர்களையெல்லாம் அந்த கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு பார்க்க வைக்கும். தறி நாவலை அவ்வகையில் சேர்த்துக் கொள்ளலாம்.

 

n  புதுச்சேரி லெனின்பாரதி


Friday 21 May 2021

சாலயோரம் நிழல் தரும் மரங்கள் -- பேரா.ராஜ்ஜா - நூல் அறிமுகம்


 

நூல் அறிமுகம்

சாலையோரம் நிழல்தரும் மரங்கள்

ஆசிரியர் : ராஜ்ஜா

வகை : கட்டுரைகள்

பக்கங்கள் : 144

விலை ரூ.120/-

வெளியீடு : இருவாட்சி (இலக்கியத் துறைமுகம்), பெரம்பூர், சென்னை 600011 .

                                        அலைபேசி 9444640986.

--ooOoo--

            தனது வாழ்க்கை மேம்படக் காரணமாக இருந்த 16 ஆளுமைகள் குறித்து திரு.ராஜ்ஜா அவர்களின் இனிமையான நினைவுகளுடன் கூடிய பதிவே இந்நூல். இக்கட்டுரைகள் யாவும் புதுச்சேரியிலிருந்து வெளியாகும் மாந்தன் இதழில் 2013 முதல் 2014 வரை ஏணி, கோணி, தோணி எனும் தலைப்பில் தொடராக வந்துள்ளன.

            நூலுக்கு மாந்தன் இதழாசிரியர் திரு.ஞா.ஜோசப் அதிரியன் ஆண்டோ அணிந்துரை வழங்கியுள்ளார். மூத்தோரை மதித்தல், கற்றோருடன் சேரல், நட்பு பாராட்டல், நன்றி கூர்தல் குறைந்து வரும் காலகட்டத்தில் ராஜ்ஜா ஒரு மாறுபட்ட மனிதராகவே காணப்படுகிறார் என்று சரியாகவே கணித்துள்ளார். மேலும் புதுச்சேரி வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் ராஜ்ஜா எழுதிய Glimpses of Pondicherry, A Concise History of Pondicherry, Folktales of Pondicherry ஆகிய நூல்களை கட்டாயம் வாங்கிச் செல்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். திரு.ராஜ்ஜாவின் இலக்கிய வளர்ச்சிக்கு அரவிந்தர் ஆசிரமம் பெரும் பங்காற்றியிருப்பதாக குறிப்பிடுகிறார். திரு.ராஜ்ஜா அவர்களின் இந்நூல் தன்னை இலக்கியப் படிக்கட்டுகளில் ஏற்றி விட்ட பதினாறு பேரையும் அவர்களிடம் அவர் பெற்றுக் கொண்ட கொடைகள், அனுபவங்கள் போன்றவற்றை சேமித்து வைக்கும் கோணியாகவும், அவரது எழுத்துலகப் பயணத்தில் தோணியாக துணை நின்ற பலரையும் நினைவுபடுத்தி எழுதப்பட்ட இந்நூல்  One and Only Radja வினால் தான் இப்படி எழுத முடியும் என்று முடித்திருக்கிறார்.

            திரு.ராஜ்ஜா தனது என்னுரையில் செய்ந்நன்றி மறக்கக் கூடாது என்று அறிவுறுத்தி அது இருந்தால் எதற்கு முதியோர் இல்லம் ? ஏன் அநாதைகள் இல்லம் எதற்கு மகளிர் மறுவாழ்வு இல்லம் ? என்ற கேள்விகளை நம் முன் வைக்கிறார். ஏற்பது இகழ்ச்சி என்று ஒளவையார் சொன்னது உழைத்து வாழ வேண்டும் என்பதை முன் வைத்துத் தான் என்று சரியாகச் சொல்லுகிறார்.

1.   பீட்டர் சாமியார் :

காந்தி வீதியில் அமைந்துள்ள பெத்தி செமினேர் மேல்நிலைப்பள்ளியின் முதல்வராகப் பணியாற்றியவர் பீட்டர் சாமியார் அவர்கள். ராஜ்ஜா காலை ஆறு மணிக்கெல்லாம் பள்ளியின் கதவைத் தட்டிய போது கதவைத் திறந்த ஞானஒளி என்று பாராட்டுகிறார். எட்டு மணி பள்ளிக்கு இவ்வளவு விரைவில் வருவதால் கடுப்பான சாமியார் ராஜ்ஜாவின் தந்தையிடம் காலை எட்டு மணிக்கு பள்ளிக்கு வந்தால் போதும் என்று கூறி விடுகிறார். ஆயிரக்கணக்கான மாணவர்களை தகுதியுள்ளவராக மாற்ற இவர் கையாண்டது இரண்டு தந்திரங்கள். ஒன்று பிகில் மற்றது பிரம்பு. ஆனால் தேவைப்பட்டால் மட்டுமே இவை இரண்டும் ஜோப்பை விட்டு வெளியே வருமாம். ஒரு முறை பள்ளி முன் நடைபெற்ற போராட்டம் பற்றிக் கேள்விப்பட்டு தனியே வந்து இதை சமாளித்த சாமியாரை “சிங்கம் எப்பவுமே சிங்கிளாத்தானே செயல்படும்” என்கிறார். பீட்டர் சாமியாரின் வகுப்பைக் கேட்பதற்காக இவர் படிக்கும் வகுப்பிலிருந்து ஆசிரியருக்குத் தெரியாமல் தவழ்ந்து சென்று அவர் பாடம் நடத்தும் பக்கத்து வகுப்பறைக்கு திருட்டுத்தனமாகப் போனதையும் ஒரு நாள் மாட்டிக் கொண்டதையும், தன்னை “காட் பிளெஸ் யு மை சன்” என்று தட்டிக் கொடுத்துக் கொண்டே சொன்னது இன்று பலித்ததையும் சொல்லி ராஜ்ஜா புளகாங்கிதம் அடைகிறார்.

2.     பேராசிரியர் சாந்தலிங்கம் :

புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் சேர்ந்த புதிதில் பேராசிரியர்கள் பாடம் நடத்துவது எப்படியிருக்குமோ என்று பயந்து கொண்டிருந்த போது பேரா சாந்தலிங்கம் வகுப்பு நடத்திய முறை கோடை காலத்தில் ஒரு கிளாஸ் நிறைய லஸ்ஸி குடித்தது போல குளுமையாக இருந்தது என்கிறார். நிறைய படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இவரை அணுகிய போது பழைய புத்தகக் கடைக்கு சென்று வாங்கிப் படிக்கச் சொன்னவர் பின்னர் சிரித்துக் கொண்டே தனது நூலகத்திலிருந்து புத்தகங்கள் கொடுத்து மறக்காமல் திருப்பிக் கொடுக்கச் சொன்னதையும் நினைவு கூர்கிறார். திரு.சாந்தலிங்கம் அளித்த பிச்சை தான் இன்று தான் அட்சய பாத்திரமாக மாறி இருப்பதாக பெருமையுடன் சொல்லுகிறார். “எந்த வாத்தியானும் எழுத மாட்டறாம்பா” என்று சாந்தலிங்கம் சொன்ன வார்த்தையில் ஓரளவு உண்மையிருப்பதாகப் படுகிறது. தனது தந்தைக்குப் பிறகு இவரது கால்களை மட்டுமே தொட்டதாக மகிழ்ந்து குறிப்பிடுகிறார்.

3.     எழுத்தாளர் கோதண்டராமன் :

புதுச்சேரி நகரின் அழகில் மயங்கி தெபாஸினே ரிஷ்மோன் வீதியில் இருந்த வீட்டின் நூலகத்தைப் பார்த்து மயங்கி நின்று பின் திரு.கோதண்டராமனுடன் தொடர்பு ஏற்பட்டதை அழகாக விவரிக்கிறார். இலக்கியத்தில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக திரு.கோதண்டராமன் அவர்கள் தான் பார்த்து வந்த வழக்கறிஞர் தொழிலை உதறிவிட்டு சுதேசமித்திரன் மூலம் எழுத்துலகத்தில் சஞ்சரித்தார். ராஜ்ஜாவுக்கும் திரு.கோதண்டராமனுக்கும் இடையிலான உறவு குடும்ப உறவாகியிருக்கிறது. ராஜ்ஜாவுக்கு  மாற்றல் வரவே தொடர்பு விட்டுப் போக மீண்டும் அவரை சந்திக்க முயற்சிக்கும் போது அவர் காலமான செய்தி தெரிய வருகிறது. ஆனால் மரணத்திற்கு முன் அவர் ராஜ்ஜாவிடம் கொடுக்கச் சொல்லி ஒரு அன்புப் பரிசை மனைவியிடம் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார். அது தான் அவர் உருவாக்கிய நூலகம். திரு.கோதண்டராமன் இப்போதும் தனது வீட்டு நூலகத்தில் சூட்சும உடம்பில் உலா வருகிறார் என்று நன்றிப் பெருக்கோடு கூறுகிறார்.

4.     போலீஸ் அதிகாரி ஜார்ஜ் மோசஸ் :

புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு அரவிந்தர் பெயர் வைக்கப் போவதாக வந்த செய்தியையடுத்து நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது போலீஸ் அதிகாரி ஜார்ஜ் மோசஸ் மோதலுடன் தொடங்கும் முதல் சந்திப்பு. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு எழுத்தாளனாக அவரை மீண்டும் சந்திக்கிறார். அப்போது ஜார்ஜ் அவர்கள் யூத் ஏஜ் எனும் மாத இதழை நடத்திக் கொண்டிருக்கிறார். இது புதுச்சேரியில் இருந்து ஆங்கில மொழியில் வெளிவந்த முதல் இலக்கியச் சிற்றிதழாகும். இதற்கு வாசகர்களும் அதிகம். இந்த சிற்றிதழில் ராஜ்ஜா அவர்களின் முதல் படைப்பு மறு பதிப்பாகிறது. பின்னர் ஆங்கிலத்தில் எழுத வாசிக்க ஆர்வம் கொண்டோரைக் கொண்டு தொடங்கப்பட்ட யூத் லிட்டரரி கிளப்பில் பங்கேற்றதால் ஆங்கில அறிவு வளர்ந்து அதனால் ஆங்கில நாளிதழ்களில் படைப்புகள் எழுதி அனுப்பி அதனால் சன்மானம் கிடைத்ததையும் அது புத்தகங்கள் வாங்க இன்று வரையும் பயன்படுவதாய்ச் சொல்கிறார். இந்த படைப்புகள் அவருக்கு உள்நாட்டில் ஒடிசா அரசு வழங்கிய ராக் பெபில்ஸ் போன்ற விருதுகளை, பெற்றுத் தந்ததை பெருமையுடன் குறிப்பிடுகிறார். திரு.ஜார்ஜ் மூலம் தான் மனோஜ் தாஸ், கெ.டி.சேத்னா, எம்.பி.பண்டிட் போன்ற ஆளுமைகளுடன் தொடர்பு கிடைத்ததையும் குறிப்பிடுகிறார். “உன்னை நாடி வருபவர்களை இன்று எனக்கு நேரம் இல்லை.. மன்னிக்கவும்… என்று மட்டும் என்றைக்கும் சொல்லாதே என்று எனக்கு மூன்று பேருமே அறிவுறுத்தியிருக்கிறார்கள்” என்று ராஜ்ஜா பெருமையுடன் குறிப்பிடுகிறார்.

5.     அமெரிக்க வியாசர் மேகி லிட்ச்சி கிராஸ்ஸி :

கெ.டி.சேத்னா கேட்டுக் கொண்டதற்கிணங்க வீரமாமுனிவரின் பரமார்த்த குரு கதைகளை ராஜ்ஜா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். சேத்னா இவரிடம் சொன்னது “கடிதங்கள் சாதகமாக இருந்தாலும் சரி, பாதகமாக இருந்தாலும் சரி அவை உன் மனதை எந்த விதச் சலனத்திற்கும் ஆளாக்கக்கூடாது” என்பதே. இந்த வார்த்தைகள் படைப்பாளிகள் அனைவருக்கும் பொருந்தும் தானே. சேத்னா மேகியை சந்திக்கிறார். லிட்ச்சியின் தந்தை ஸ்பானிஸ் நாட்டவர். தாய் பிரெஞ்சுப்பெண்மணி. ஆங்கிலம் கற்றுக் கொண்டதோ ஒரு ஆங்கிலப் பெண்மணியிடம்.  கல்லூரிப்படிப்பு தென் ஆப்ரிக்காவில். இவரோ ஒரு அமெரிக்கப் பிரஜை. திருமணம் செய்து கொண்டதோ ஒரு இத்தாலியரை. ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி மொழிகளிலும் எழுதும் ஆற்றல் கொண்டவர். இவரின் திறமை கண்டு அன்னை இவரை தனது காரியாதரிசியாக்கிக் கொண்டார். புதுச்சேரிக்கு வருபவர்கள் இங்கேயே ஏன் தங்கி விடுகிறார்கள் என்பதற்கு ராஜ்ஜா அவர்களின் பதில் “என்னைப் பொறுத்தவரை புதுச்சேரி ஒரு மிகப் பெரிய அண்டாவாகவே தோன்றுகிறது. எதெல்லாம் அதில் விழுகிறதோ அதெல்லாம் அங்கேயேதான் கிடக்க வேண்டும் என்பது எழுதப்படாத நியதி போலும்”.  மகாபாரதத்தை புதிய கோணத்தில் படைக்க விரும்பிய லிட்ச்சியுடன் பணி புரிந்த காலத்தையும், அவர் தனக்கு வழங்கிய மாத ஊதியம் ஆயிரம் ரூபாய் குறித்தும் பெருமிதத்துடன் குறிப்பிடுவதுடன் இன்று வரை அவருடன் தொடர்பில் இருப்பதாகவும் பெருமையுடன் குறிப்பிடுகிறார்.

6.     அமல்கிரன் என்கிற கெ.டி.சேத்னா :

கவிஞனுக்கு மோட்டுவளை தானே அட்சயபாத்திரம் என்றும் சிரித்த முகத்தோடு ஒருவரை பார்ப்பதே கடினமாக இருக்கிறது என்றும் அதிலும் தானும் சிரித்து மற்றவர்களையும் சிரிக்க வைப்பது என்பது என்ன சாதாரண காரியமா என்று வினாயெழுப்புகிறார் ராஜ்ஜா.  சேத்னா உலகப் புகழ் பெற்ற மதர் இந்தியா இதழை நடத்தி வந்தவர். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க மதர் இந்தியாவில் நூல் விமர்சனம் எழுதுகிறார். நொலினியின் படைப்புகளில் ஏழாம் பகுதியைக் கொடுத்து விமர்சனம் எழுதி வரச் சொல்லி தேர்வு வைக்கிறார். ஒரு மாதம் படித்து பின்னர் தயார் செய்து கொண்டு சென்று கொடுத்த விமர்சனத்தைப் படித்து மகிழ்ந்த சேத்னா மதர் இந்தியாவில் நூல் விமர்சனம் எழுதும் பொறுப்பை ஒப்படைக்கிறார். ராஜ்ஜா எழுதிச் சென்று கொடுத்த ஆங்கிலக் கவிதைகளை கோபத்துடன் சேத்னா கிழித்தெறிகிறார். கவிதை குறித்து சேத்னா கொடுத்த விளக்கம் இருக்கிறது  பாருங்கள் … “ கவிதை கவிதைதான். அதில் நல்ல கவிதை, கெட்ட கவிதை என்று ஏதும் இல்லை. கவிதை எழுத வேண்டுமானால் உலகக் கவிகளைப் படி. ரசித்துப் படி. உனக்கே புரியும் கவிதை என்றால் என்ன என்பது. பின் கவிதை எழுது” என்று சொல்லியிருக்கிறார். இன்று கவிதை என்ற பெயரில் வரும் பல்வேறு கிறுக்கல்களைப் பார்க்கிற போது இந்த வரிகள் தான் நினைவுக்கு வந்தது. மதர் இந்தியா அக்டோபர் 1979 இதழில் இவரது கவிதையை “One Aim – One Desire – One Goal” என்ற தலைப்பில் பிரசுரித்தது. இதை அரிஸ்டோஸ் என்ற அமெரிக்க ஆங்கில மாத இதழ் மறு பிரசுரம் செய்திருந்தது. தான் கிளைவிடக் கற்றுக் கொண்டதும், மற்றவர்களுக்கு நிழல் கொடுக்க பழகிக் கொண்டதும் மதர் இந்தியா பத்திரிக்கையில் தான் என்று மகிழும் ராஜ்ஜா இவருடனான தனது நினைவுகளை “K.D.Sethna : An Introduction Through Interaction” என்ற தனது நூலில் முழுமையாக பதிவு செய்துள்ளார்.

7.     கன்னடச் சித்தர் மாதவ் பண்டிட் :

மாதவ் பண்டிட் அவர்களை ஆசிரியராகக் கொண்டு ஆசிரமத்தின் தி அட்வெண்ட் என்ற காலாண்டிதழும், வேர்ல்ட் யூனியன், சர்வீஸ் லெட்டர் என்ற இரண்டு மாத இதழ்களும் வந்து கொண்டிருந்தன. அவரை ஒரு மாலைப் பொழுதில் பிரசங்கம் செய்யும் போது போலீஸ் அதிகாரி ஜார்ஜ் அழைத்துக் கொண்டு போய் அறிமுகப்படுத்த நட்பு மலர்கிறது. மனம் சரியில்லாத போதெல்லாம் அவரிடம் ராஜ்ஜா அவர்கள் செல்வதும் இவருக்கு வாழ்க்கை குறித்து பலவற்றை எளிமையாகச் சொல்லுவாராம். மாதவ் பண்டிட் மங்களூரைச் சேர்ந்த கன்னடத்துக்காரர் என்றாலும் ஆசிரமவாசி. வாழ்க்கை குறித்து அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளோருக்கு மாதவ் பண்டிட் எழுதிய LIFE BEAUTIFUL மிகவும் உதவிகரமாக இருக்கும் என்கிறார் ராஜ்ஜா. மாதவ் பண்டிட்டிடம் அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டுமென ராஜ்ஜா கூறிய போது இதை முடிப்பதற்குள் மரணம் சம்பவிக்கும். அது உனக்கா எனக்கா என்றுதெரியவில்லை எனக் சொல்லியிருக்கிறார். ராஜ்ஜா கடைசி அத்தியாயத்தை முடிக்கும் முன் பண்டிட் காலமாகி விட்டார். ராஜ்ஜா பண்டிட் குறித்து எழுதிய “M.P.Pandit: A Peep into His Past” பண்டிட்டின் முதலாம் நினைவு தினத்தன்று வெளியிடப்பட்டது. அமெரிக்க வாழ்க்கை வரலாற்று நிறுவனம் 1996-ஆம் ஆண்டிற்கான சிறந்த புத்தகமாக இதைத் தேர்வு செய்து தங்கப்பதக்கத்தை தபாலில் அனுப்பியது அது காணாமல் போய் காலி கவர் மட்டும் கைக்குக் கிடைத்ததும் ஏமாற்றமடைந்த ராஜ்ஜா மீண்டும் முயற்சி செய்து வேறொரு பதக்கத்தை பெற்றதும் சுவாரசியமான செய்திகள்.

8.     மொழியாக்கத்திற்கு முக்கியத்தும் தந்த கவிஞர் மீரா:

“உம்மோட டி.எஸ்.எலியட்,வால்ட் விட்மனோடு மீராவையும் மென்று சுவையுங்கள்” என்று மீராவை ராஜ்ஜாவிற்கு அறிமுகப்படுத்தி சுவைக்கச் செய்தவர் பேராசிரியர் பஞ்சாங்கம். இடையே தனது குணத்தையும் வெளிபடுத்தியிருக்கிறார். “நானும், பஞ்சுவும் அப்படி இல்லை. எந்த ஊருக்கு மாற்றலானாலும் எந்த மேலதிகாரியிடமும் சென்று தலை சொரிந்து பல்லிளிக்கும் வழக்கம் எங்களுக்கு இருந்ததே இல்லை” என்கிறார். ஒரு தலை சிறந்த எழுத்தாளன் கர்வம் கொள்வதில் எந்த தவறும் இல்லை. மீராவை ராஜ்ஜா அவர்களின் வீட்டிற்கே அழைத்து வருகிறார் பஞ்சாங்கம். நூலகத்தை பார்வையிட்டு விட்டு தனது பதிப்பகம் சார்பில் வெளியிட நூல்கள் கேட்கிறார். ராஜ்ஜா அதிர்ந்து போகிறார்.  இறுதியில் வீரமாமுனிவரின் பரமார்த்த குரு கதைகள் ஆங்கில மொழிபெயர்ப்பினையும், பாரதியின் வசன கவிதைகளையும் பதிப்பிக்க எடுத்துச் செல்கிறார். 1981-ல் வீரமாமுனிவரின் பரமார்த்த குரு கதைகள் ஆங்கிலத்தில் THE STUPID GURU AND HIS FOOLISH DISCIPLES  என்ற தலைப்பிலும், 1982-ல் பாரதியின் வசன கவிதைகள்  THE SUN AND THE STARS என்ற தலைப்பிலும் வெளிவந்தன. இரண்டுமே அகரம் வெளியீடுகளாக வந்தன.

ஆங்கில நாடாகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் குறித்து எளிய முறையில் தமிழர்களுக்காக ராஜ்ஜா எழுத வேண்டும் என்று மீரா சொல்லியிருக்கிறார். இன்று வரை ராஜ்ஜாவால் எழுத முடியவில்லையாம். எப்போது எழுதி முடித்து வெளியிடுவீர்கள் ராஜ்ஜா..?

 

 

9.     எழுத்துச் சித்தர் கெளதம நீலாம்பரன்

கெளதம நீலாம்பரன் குறித்து சொல்லும் போது “குட்டி யானையின் வாலை பிடித்துக் கொண்டு செல்லுமே.. அதே போல் நான் இவரால் பராமரிக்கப்பட்டிருக்கிறேன்” என்கிறார். நீலாம்பரனை ராஜ்ஜாவுக்கு அவர் தாயார் தான் அறிமுகப்படுத்தியிருக்கிறார். கெள்தம நீலாம்பரனின் உறவின் எல்லைகள் நாடகத்தை புதுச்சேரி வானொலிக்காக BOUNDS OF RELATIONSHIPS என்ற தலைப்பிட்டு மொழிபெயர்ப்பு செய்தார். தமிழில் எழுத வேண்டுமென நீலாம்பரன் பலமுறை கடிதம் மூலமாக கேட்டுக் கொண்டிருக்கிறார். கெளதம நீலாம்பரனின் புத்தர்பிரான் தொடரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். 

ராஜ்ஜா சார்… மொழிபெயர்ப்பு முடிந்து விட்டதா…

10.  தர்மகர்த்தா வரதராசு :

ராமலிங்க சுவாமிகளின் தீவிர பக்தர் வரதராசு ராஜ்ஜாவிடம் சொன்னாராம் “நீ எவ்வளவு உயர்ந்தாலும் பழசையெல்லாம் அடிக்கடி நினைத்துப் பார்க்க மட்டும் என்றும் மறந்துவிடாதே”. இதையே கீதோபதேசமாக ராஜ்ஜா பார்க்கிறார். ராஜ்ஜாவின் படிப்புச் செலவிற்கு பணத்திற்கு ராஜ்ஜாவின் தந்தை கஷ்டப்படும் போதெல்லாம் கொடுத்து உதவியவர் திரு.வரதராசு. பிறந்த ஊருக்காய் என்ன செய்தாய் என்று கேட்ட வரதராசு அய்யனார் கோயிலின் தலவரலாற்றை எழுதும்படி அன்போடு பணித்திருக்கிறார். கோயில் பக்கமே போகாத ராஜ்ஜா கஷ்டப்பட்டு புதுச்சேரியிலுள்ள கோவில்கள் பற்றிய தகவல்களையெல்லாம் சேகரித்து தொகுத்து படைத்திருக்கும் படையல் தான் ANCIENT TEMPLES AND LEGENDS OF PONDICHERRY.

11.  ஆருயிர் நண்பர் ஞானசேகரன்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்கச் சென்ற போது ஏற்பட்ட நட்பு. இது குறித்துச் சொல்லும் போது “இப்போதெல்லாம் நல்ல நண்பர்கள் கிடைப்பதே அரிதாகிவிட்டது. அப்படியே கிடைத்தாலும் அந்த நட்பை தக்க வைத்துக் கொள்வதற்கு படாத பாடு பட வேண்டியிருக்கிறது. நட்பை உடைப்பதற்காகவே பல “புண்ணியவான்களும், புண்ணியவதிகளும்” கங்கணம் கட்டிக்கொண்டு இப்பூவூலகில் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள். ராஜ்ஜாவும் அவர் நண்பரும் தினமும் காலை இரண்டு மணி நேரம் படிப்பார்கள். ஆனால் பாட புத்தகத்தை அல்ல. நாவல் அல்லது கவிதைத் தொகுப்பு அல்லது நாடகம். பல்கலைக்கழக நூலகத்தில் என்னென்ன புத்தகங்கள் உள்ளன அவை எங்கே உள்ளன என்பது நூலகரை விட இவர்கள் இருவருக்கும் தான் அத்துபடி. சிதம்பரத்தில் படிக்கும் போது இருவரும் கோயிலுக்கு வரும் “அம்மன்”களை தரிசிக்க சென்று விடுவதையும் குறிப்பிடுகிறார். நண்பர் துணை கொண்டு வெளிவந்த இவரது முதல் ஆங்கில கவிதைத் தொகுப்பு FROM ZERO TO INFINITY.  இந்த நூல் கொல்கத்தாவின் மிகப்பெரிய இலக்கிய விருதான மைக்கேல் மதுசூதன் அகாதமி விருதை பெற்றது. “உள்ளதை உள்ளபடி காட்டும் காலக்கண்ணாடிதான் ஒவ்வொரு சிறந்த விமர்சகனும்.. நம்மைத் தேடி வருவதே விருது. நாம் தேடிப் போவதற்கல்ல.  அவைகளைத் தேடி, நாடிப்போகும் எந்த படைப்பாளியும், சிறந்த படைப்பாளியாக இருக்க முடியாது“ என்பதே ராஜ்ஜா அவர்களின் கருத்து. உண்மைதானே…

 

 

12.  அமெரிக்காவில் எனக்கொரு தாய்

சென்னை டிவிஎஸ் பஸ்ஸ்டாப்பில் இறங்கி உமர்கய்யாம் ஓட்டலில்  இடியாப்பமும், கால் பாயாவும் விழுங்கி விட்டு பல்கலைகழகத்திற்குச் சென்று தனது ஆராய்ச்சி கட்டுரைகளை வழிகாட்டி பேராசிரியர் எம்.எஸ்.நாகராஜனிடம் காட்டி அவரின் பாராட்டுக்களைப் பெறுவார். ஒரு முறை பேராசிரியர் இவரிடம் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடும் போது என் பெயரை போடக் கூடாதா என்று கேட்க என் உழைப்பில் உங்களுக்கு பங்கு கொடுக்க மாட்டேன் என்று துணிச்சலுடன் சொல்லியிருக்கிறார். என்ன செய்வது இப்படியும் சில சிறுமை படைத்த பேராசிரியர்கள்.. பின்னர் பிரிட்டீஸ் கவுன்சில் நூலகத்திலும், அமெரிக்க நூலகத்திலும் தனது நேரத்தை செலவிட்டிருக்கிறார். ஒரு நாள் இவருடைய படைப்பைத் தாங்கி PROPHETIC VOICES  எனும் அமெரிக்க சஞ்சிகை வருகிறது. அத்துடன் எங்கள் பத்திரிக்கைக்கும் படைப்புகளை அனுப்புங்கள் என்கிற வேண்டுகோள் ரூத் வைல்ஸ் ஷீலர் கையொப்பத்துடன் வருகிறது. ஆச்சர்யம் தானே .. உடனே இவர் சில கவிதைகளையும், கதைகளையும் அனுப்ப இவர் எழுதிய THE BLOOD  சிறுகதை பிரசுரமாகிறது. இந்தியப் பத்திரிக்கைகளால் நிராகரிக்கப்பட்ட இந்தக் கதையினை புஷ்கார்ட் விருதுக்கு ரூத் அம்மையாரே பரிந்துரைக்கிறார். ஆனால் விருது கிடைக்காமல் போன போது ராஜ்ஜாவை விட அதிகம் வருத்தப்பட்டவர் ரூத் அவர்களே. ராஜ்ஜா அவர்கள் கம்ப்யூட்டர் வாங்கக் காரணாமாய் இருந்தவர் இவரே. ராஜ்ஜா அவர்களுக்கு அவரது தாயார் காலமான போது ரூத் ஒரு கடிதம் எழுதியிருந்தார்…” அம்மா விட்டுச் சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியாதுதான் என்றாலும் அமெரிக்காவில் உனக்கொரு தாய் என் உருவத்தில் இருக்கிறாள் என்பதை மறந்து விடாதே”. இவர்களின் தூய்மையான உறவாடல் இன்று வரை தொலைபேசி வழியாகவும் ஈமெயிலிலும் தொடர்வதாக ராஜ்ஜா மகிழ்ச்சியுடன் பகிர்கிறார்.

13.  என்னை தலை நிமிர வைத்த என் சிநேகிதி ரீத்தா :

உலகம் முழுக்க எழுதத் தொடங்கியிருந்தாலும் உள்ளூரில் இருந்த சாரைப்பாம்பை இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் ராஜ்ஜா அவர்களுக்கு. இதற்காக அழுதிருக்கிறார். அப்போது தான் அந்தத் தொடர்பு கிடைத்திருக்கிறது… “எனக்கென்று நல்லதொரு இலக்கிய கர்த்தாவை ஆசிரம அன்னை எனக்கு வரப்பிரசாதமாக அனுப்பியிருந்தார்.” என்று அவரை ராஜ்ஜா குறிப்பிடுகிறார். அவர்தான் திருமதி ரீத்தா நாத் கேஸரி. இவர் பேராசிரியப் பணிக்கு வருவதற்கு முன் வங்காள மொழி மற்றும் ஆங்கில நாளிதழ்களில் நிறைய படைப்புகளைத் தந்திருக்கிறார். அவரின் நறுக்குத் தொகுப்பினை (SCISSORS AND PASTE)  பார்த்து விட்டு ராஜ்ஜா நினைத்துக் கொள்கிறார் “போட்டி வெற்றிகளைக் குவிக்கும். பொறாமை தன்னையே கழுத்தறுத்துவிடும்”. அதன் பின்னர் ராஜாவை அழைத்துக் கொண்டு சாரைப்பாம்பு அலுவலகத்திற்கே செல்கிறார். இவரது படைப்புகளை ஏன் போடவில்லை என்று அதிகாரத் தொனியில் கேட்கிறார். அதன் பின்னர் அவரது கட்டுரைகளை சாரைப்பாம்பு தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டே இருந்தது. அந்த சாரைப்பாம்பு தான் தி ஹிந்து ஆங்கில நாளிதழ். ராஜ்ஜா எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து பிஸி பி புக்ஸ் மூலமாக புத்தகங்களாகக் கொணர்ந்தார். GLIMPSES OF PONDICHERRY, A CONCISE HISTORY OF PONDICHERRY, FOLKTALES OF PONDICHERRY, BUSY BEE BOOK OF CONTEMPORARY INDIAN ENGLISH POETRY  ஆகிய நூல்கள் மலர்ந்தன. ROUTLEDGE நிறுவனம் வெளியிட்ட ENCYCLOPAEDIA OF POST-COLONIAL LITERATURES IN ENGLISH எனும் கலைக்களஞ்சியத்தில் ராஜ்ஜா குறித்து கட்டுரையினை ரீத்தா அவர்கள் வழங்கியுள்ளார்.

14.  என் வீட்டை நூலகமாக்கிய மணி :

“வீட்டில் புத்தகங்கள் இருந்தாலே சரஸ்வதியோடு லட்சுமியும் குடியேறுவாள்” என்று ராஜ்ஜாவின் அப்பா அவரிடம் அடிக்கடி கூறுவாராம். பழைய புத்தகக் கடைகளை தங்கச்சுரங்கம் என்கிறார் ராஜ்ஜா. புதுச்சேரியில் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் சென்னையிலிருந்து பழைய புத்தகங்களோடு வந்து கடை போடும் திரு.மணியை ராஜ்ஜா தனது நெருங்கிய நண்பராகவே கருதியிருக்கிறார். பழைய புத்தகக் கடைகளில் தோண்டத் தோண்ட புதையல் போல கிடைத்துக் கொண்டே இருக்குமாம். இதற்காக எல்லா புத்தகக் கடைகளிலும் ராஜ்ஜா கணக்கு வைத்திருப்பாராம். இவரிடம் ஆங்கிலம் கற்க வரும் மாணவர்கள் கொடுக்கும் மாத ஊதியத்தை புத்தகங்கள் வாங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார். இதற்கு காரணமான தனக்குக் கிடைத்த வாழ்க்கைத் துணையை இப்படி வஞ்சப்புகழ்ச்சியாக புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.. “சாக்ரடீசுக்கு கிடைத்த மாதிரி ஒரு ஸேந்திப்பி என் வாழ்க்கைத் துணைவியாகக் கிடைத்திருந்தால் என் நூலகக் கனவு எப்போதோ கலைந்து போயிருக்கும்”… “என்னிடம் வந்து சேரும் புத்தகங்கள் என்ன காரணத்தினாலோ என்னை விட்டுப் போவதில்லை… புத்தகங்களுக்கு நான் சாந்துப் பொட்டு.. எனக்கு அவை ஜவ்வாது பொட்டு… என் புத்தகங்களே என் உறவினர்கள்.. என் ஆருயீர் நண்பர்கள்.. நட்பு ஒன்றையே பிரதானமாகக் கருதும் என் மனதை நோகடிக்காதவர்கள். என்னுடனே இருந்து கொண்டு எனக்கு குழி வெட்டாதவர்கள்.  முகத்திற்கு நேரே ஒன்று பேசி முதுகின் பின்னால் வேறொன்று பேசத் தெரியாதவர்கள்.. சாகாவரம் பெற்ற ஜீவராசிகள். இவர்களின் மத்தியில் வாழ்வது எனக்கு மிகப்பெருமையாக உள்ளது. இவருக்கு பழைய புத்தகங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் திரு.மணி கடை போட்ட பின்னரே ராஜ்ஜாவுக்கு பல மொழி எழுத்தாளர்கள் நிறைய பேர் அறிமுகமாகியிருக்கிறார்கள். மணி இவரின் நெருங்கிய நண்பராக இருப்பதில் வியப்பென்ன…

15.  என்னையும் ஒரு பத்திரிக்கைக்கு ஆசிரியனாக்கி அழகு பார்த்தவர்

ராஜ்ஜாவின் எழுத்துக்களைப் பார்க்கும் போதெல்லாம் அவர் அப்பா சொல்வாராம்… “இவன் வெறும் பேராசிரியனாக மட்டும் இருந்தால் இவனது மாணவர்கள் தவிர இவனை எவன் மதிப்பான் ..? எழுத்தாளனாகவும் இருப்பதால்தான் இவனுக்கு என்றுமே மதிப்பு”.. ராஜ்ஜா சொல்கிறார் …”என்னதான் செடிக்கு உரமிட்டு தண்ணீர் விட்டாலும் வளர வேண்டும் என்று அது முயன்றால்தானே மரமாக முடியும். நான் முயன்றேன். வென்றேன். என் மீது பல கொடிகளைப் படரவும் விட்டிருக்கிறேன். அந்த கொடிகளும் செடிகளும் இன்றும் என்னை நன்றி விசுவாசத்தோடு பார்க்கிறபோது “நான் வளர்ந்ததனால் ஆன பயனை” எனக்குக் கூறிக் கொண்டே இருக்கின்றன”. ராஜ்ஜாவுக்கு குறிஞ்சிவேலன் என்ற மொழிபெயர்ப்பு எழுத்தாளர் கிடைக்கிறார். குறிஞ்சிவேலன் மலையாளத்திலிருந்து பல நாவல்களை தமிழில் மொழி பெயர்த்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இவரைப் பற்றி ராஜ்ஜா சொல்லும் போது “மாட்டு டாக்டர் செல்வராசு ஓய்வு பெற்றிருந்தாலும், குறிஞ்சிவேலனுக்கு ஓய்வே கிடையாது.. ஒருவரிடம் இலக்கிய அக்னிக் குஞ்சினை அவர் கண்டு விட்டால் அதை காட்டினில் பொந்திடை வைத்து விடுவார் பிறகு என்ன ? தீம்தரிகிட தித்தோம்தான்” என்கிறார். பின்னர் ராஜ்ஜாவை ஆசிரியராகக் கொண்டு டிரான்ஸ்பயர் என்ற ஆங்கில இதழ் மலர்ந்தது. ராஜ்ஜா மேலும் சொல்கிறார் ‘யார் ஒருவர் மற்றவரை சான்றோனாக்கிப் பார்க்கிறாரோ அவர் அவரது தந்தைக்குச் சமம்” … உண்மை தானே…

 

 

16.  என் குருவாகி வந்த மனோஜ் தாஸ் ..

மனோஜ் தாஸ் அவர்களைப் பற்றி கூறத் தொடங்கும் போது ராஜ்ஜா இப்படி தொடங்குகிறார். “தாயுமாகி, தந்தையுமாகி, அவர்களைவிட ஒரு படி மேலே இருக்கக்கூடிய குருவுமாகி எனக்கு வரவிருக்கும் ஒருவரை”. மனோஜ் தாஸை ராஜ்ஜாவுக்கு அறிமுகப்படுத்தியவர் வழக்கம் போல போலீஸ் அதிகாரி ஜார்ஜ் தான். அரவிந்தரின் இலக்கியத்தை ராஜ்ஜாவுக்கு அறிமுகப்படுத்தியவர் மனோஜ் தாஸ். அவர் வெளியூர் சென்ற சமயங்களில் உரையாற்ற அவர் தன் சார்பாக “என் இலக்கிய வாரிசை” அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி ராஜ்ஜாவை அனுப்பியும் வைத்திருக்கிறார். அந்த அளவுக்கு ராஜ்ஜா மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருக்கிறார். சாகித்ய அகாதெமி இருமுறை மனோஜ் தாஸ் அவர்களுக்கு விருது வழங்கியுள்ளது. மேலும் பெல்லோ விருதினை கொடுத்துள்ளது. ஒரு சமயத்தில் ஒரு நாட்டில் பதினெட்டு பெல்லோ விருது பெற்றவர்கள் மட்டுமே இருக்க முடியுமாம்.. பெல்லோ என்ற சொல்லுக்கு அகாதெமி கொடுக்கும் பொருள் “சாகா வரம் பெற்ற எழுத்தாளர்” என்பதாம். பெரிய விஷயம் தானே.. மனோஜ் தாஸ் இலக்கிய வாரிசு என்று தன்னை அறிவித்தது மிகப்பெரிய நோபல் பரிசு என்கிறார் ராஜ்ஜா. மேலும் ராஜ்ஜா அவர்களை புதுவை பல்கலைக்கழக பிரதிநிதியாகச் செல்ல தகுதியானவர் என்றும் மனோஜ்தாஸ் முன்மொழித்திருக்கிறார். இதனால் சாகித்ய அகாதெமியின்  ஆங்கிலச் செயற்குழு உறுப்பினராக ராஜ்ஜா தெரிவு செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். ராஜ்ஜா சொல்கிறார்..” உழைப்பனுக்குத்தான் பதவி. எதையும் நாம் தேடிச் செல்ல வேண்டியதில்லை. எல்லாம் நம்மைத் தேடி வர வேண்டும்.. வரும்..” நம்பிக்கை தானே வாழ்க்கை.. மனோஜ் தாஸ் முன்னூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்திருக்கிறார்.. இப்படிப்பட்ட ஒருவரை ராஜ்ஜா விடுவாரா.. மனோஜ் தாஸ் குறித்து 1992-ல் PROBING THE PSYCHE: SHORT STORES OF MANOJ DAS  என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டார். அது பின்னர் புதுதில்லி புத்தக வெளியீட்டு நிறுவனம் B R PUBLISHING HOUSE  புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறது.. மனோஜ் தாஸ் அவர்கள் “நீயும் ஒரு நாள் பெல்லோ ஆவாய்” என்று சொல்லி ஆசீர்வதித்திருக்கிறார்.

நண்பர்கள் அமைவதெல்லாம் மிகப்பெரிய வரம். திரு.ராஜ்ஜா அவர்களுக்குக் கிடைத்த ஆளுமைகள் மற்றும் அவர்களை ராஜ்ஜா உரிய முறையில் பயன்படுத்திக் கொண்ட விதம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த நூல் ராஜ்ஜா அவர்களின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியாகவும் ஏற்றுக் கொள்ளலாம்.. ராஜ்ஜா அவர்களின் உழைப்பு மலைப்பினைத் தருகிறது..

உதவிகள் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த உள்ளம் என்பது எல்லாருக்கும் இருக்காது ..  சிலருடனான நினைவுகள் அவர்கள் நமக்கு செய்த உதவிகள் நமது இறுதி காலம் வரை நம்முடனே நடை பழகி வரும்… சில நினைவுகள் உதவிகள் கண்ணில் நீரை வரவழைத்து விடும்… நம் வாழ்வில் நாம் முன்னேற நிச்சயம் சிலர் உதவியிருப்பார்கள்.  ஆனால் நம்மில் எத்தனை பேர் இதை நினைவில் கொண்டு அவர்களுடனான நட்பினை எழுத்து வடிவில் பதிவிட்டிருக்கிறோம்…? ராஜ்ஜா இந்த அரிய பணியினை செய்திருக்கிறார்.. பாராட்ட வேண்டிய பணி..

n  புதுச்சேரி லெனின்பாரதி.