Monday, 28 December 2015
Sunday, 27 December 2015
Thursday, 3 December 2015
கனமழையால் கனத்துப் போன புதுச்சேரி
புதுச்சேரியும் தற்போது பெய்து வரும் கன மழையால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது .. கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் உள்ளிட்ட பகுதிகள் பாகூர், கரிக்கலாம்பாக்கம், வில்லியனூர், ரெட்டியார்பாளையம் என்று மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள் .. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அவர்களும், சமூக நலத் துறை அமைச்சர் திரு.இராஜவேலு அவர்களும், மக்களைச் சென்று சந்தித்த காட்சிகள். இது தவிர புதுச்சேரி முதல்வரின் பாராளுமன்றச் செயலரும், இலாசுப்பேட்டைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமாகிய திரு.வீ.வைத்தியநாதன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டும், உணவு வழங்கியும், சட்டமன்ற உறுப்பினர் திரு.க்.இலட்சுமிநாராயணன் அவர்கள் களப்பணி ஆற்றியும் உணவு வழங்கியும் வருகிறார்கள். யாரும் எங்களைப் பார்க்க வரவில்லை என்கிற குரல் புதுச்சேரியில் அதிகம் வரவில்லை. முழங்கால் அளவு தண்ணிரில் இறங்கி பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.என்.ஜி.பன்னீர்செல்வம் அவர்கள் மக்களைக் கண்டு பேசி ஆறுதல் கூறி வருகிறார்கள் .. பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம் ... தமிழகத்தைச் சேர்ந்த ஊடகங்கள் சென்னையை மையப்படுத்தியே காயை நகர்த்துவதாகத் தெரிகிறது. புதுச்சேரியை கண்டு கொண்டதாகவேத் தெரியவில்லை .. வேதனைக்குரிய விசயம்...
Wednesday, 2 December 2015
நீதியரசர் சந்துரு அவர்களின் உரை - 6
நெருக்கடி நிலையின்போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 42வது திருத்த சட்டத்தின் மூலம் ‘51-A’
என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு குடிமகனும் பின்பற்ற வேண்டிய அடிப்படைக் கடமைகள் கொடுக்கப்பட்டிருந்தன.
51-A(h) என்ற ஷரத்தில் ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் பூர்வமான உணர்வை வளர்த்துக் கொள்ளவும் மனிதாபிமானமும் மற்றும் விசாரணைக்கான உணர்வுடன் சீர்திருத்தங்கள் செய்யவும் கடமைப்பட்டவர்களென்று கூறப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங் களை எல்லாம் ஒழுங்குபடுத்தக் கூடிய பல்கலைக்கழக மானியக் குழு
(UGC) பற்றிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்தது. “சோதிட விஞ்ஞானம்” என்ற ஒரு புதிய பட்டப்படிப்பிற்கு யு.ஜி.சி. வழங்கிய அங்கீகாரத்தையெதிர்த்து சில பகுத்தறிவுவாதிகளும் தில்லி அறிவியல் சங்கமும் இணைந்து பி.எம்.பார்கவா என்பவ ருடைய பெயரில் அவ்வழக்கு தொடரப்பட்டது.
அறிவியல் பூர்வமற்ற ஜோதிடக் கலைக்கு அங்கீகாரமளித்த பல்கலைக்கழக மானியக்குழுவின் நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதம் என்று வாதாடப்பட்டது. பல்கலைக்கழக மானியக் குழுவின் கொள்கை முடிவில் தலையிட முடியாதென்று உச்ச நீதிமன்றம் அவ்வழக்கை தள்ளுபடி செய்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இதுபோன்ற கட்டுரை தொகுப்புகளை மக்களிடம் எடுத்துச் சென்றால்தான் நாட்டில் பகுத்தறிவு வளரும். இவை போன்ற பல நூல்களை மறுபதிப்பு செய்ய வேண்டிய தேவை இன்று அதிக அளவில் உள்ளது.
(சென்னை இளெகிக சங்கம் - ஆறு தொகுதிகள் மற்றும் அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு ஆகிய இரு நூல்களை
28.10.2013 அன்று மாலை வெளியிட்டு நீதிபதி கே.சந்துரு அவர்கள் நிகழ்த்திய உரையின் எழுத்து வடிவம்.)
கருத்து உதவிக்காக நன்றி : தோழர்.அரசு எழிலன்
நீதியர்சர் சந்துரு அவர்களின் உரை - 5
இசுலாமியர் அல்லது கிறித்துவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் அம்மதங்களுக்கெதிராக பிரச்சாரம் செய்வது கடினம். ஆனால் இங்கு இந்துக்கள் பெரும்பான்மையினராக இருப்பினும் கடவுள் மறுப்புக் கொள்கைகளைப் பரப்ப இட முண்டு. ஏனென்றால் இந்து சமயவாதிகள் எல்லா கருத்துக்களை யும் தம் மதத்திற்குள் சேர்த்துக் கொள்ள பெருமைப்படுபவர்.
சைவ நாயன்மார்கள் 63 பேரில் சாக்கிய நாயன்மாரும் ஒருவர். அவர் தினசரி சிவலிங்கத்தைக் கல்லால் அடிப்பார். அவரையும் ஒரு நாயன்மாராக ஏற்றுக் கொண்டனர். அவரைப் பற்றி திருத்தொண்டத்தொகை இவ்வாறு கூறுகிறது:-
“வார்கொண்ட வனமுலையாள்
உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கு அடியேன்”
மேலும் திருச்சங்க மங்கை அவரை இப்படி வருணிக்கிறது.
“கல்லெறிவார் துவராடைப் படம்புனைவேடந்தவிரார்”
ஆகவே இந்து மதம், மதத்தை வெறுப்பவர்களையும், விரோதி களாகப் பார்ப்பவர்களையும் தன்னுள்ளே ஏற்றுக்கொள்கிறது. ஒன்றரை நூற்றாண்டிற்கு முன் சைவ மதம், வைணவ மதம் என்றே இரு பிரிவுகளிருந்தன. இந்து மதம் என்ற சொல் அன்றைக்கில்லை. இவ்விரு மதங்களும் கி.பி.10ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் மறுமலர்ச்சி பெற்றதாகக் கூறப்படுகிறது.
அதற்கு முந்தைய காலத்தை இருண்ட காலம் என்கிறார்கள். உண்மை என்னவென்றால் அப்பொழுது மிகப்பெரிய அளவில் சமணர்கள் கழுவில் ஏற்றிக் கொல்லப்பட்டனர். சமணர் பள்ளிகள் உடைக்கப் பட்டு சமண நூல்களும் தீயிடப்பட்டன. இவைதான் அன்றைய சகிப்பற்ற தன்மையைக் காட்டுகிறது.
மதுரையருகே வைகையாற்றின் கரையோரம் திருவேடகம் என்றொரு ஊருண்டு. சமண நூல்களையெல்லாம் ஆற்றில் போட்டு மூழ்கடித்த வரலாற்றின் நினைவுச் சின்னம் அந்த ஊர். ஒரு சமயம் இன்னொரு சமயத்தை அழித்துதான் இங்கே வாழ்ந்து கொண்டிருந்தது. மதத்தையும் கடவுளையும் வெறுப்பவர்களைக் கூட உள்வாங்கிக் கொள்ளும் போக்கு இங்குள்ளது. இல்லா விட்டால் கண்ணதாசன் எழுதிய சினிமா பாடல் ‘பார்த்தால் பசி தீரும்’ என்ற படத்தில் இடம்பெற்றிருக்காது.
“தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
சிலை என்றால் வெறும் சிலை தான்
(2)
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை
இல்லை என்றால் அது இல்லை.”
மேலை நாட்டிலே “மத சார்பின்மை” என்றால் “A
State is divorced from Religion”, அதாவது மதத்தை தள்ளி வைத்த அரசு என்று சொல்வார்கள். ஆனால் இங்குள்ளவர்கள் அதை புரிந்துகொண்டிருப்பது வேறொரு அர்த்தத்தில்.
1990இல் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியின் தலைவர் தீபாவளியையட்டி அனுப்பிய வாழ்த்து அட்டை பற்றிய வழக்கொன்று திராவிடக் கழகத் தலைவர் வீரமணியால் சென்னை உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டது. அவ்வட்டையில் ஓம் என்ற எழுத்துடன் காயத்ரி மந்திரம் ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலும் அச்சடிக்கப்பட்டிருந்தது. அதன் கீழ் பொன்னப்பா என்ற அதன் தலைவர் அம்மந்திரத்தை அனைவரும் அனுதினமும் உச்சரிக்க வேண்டுமெனக் கேட்டு கையெழுத்திட் டிருந்தார்.
அனைத்து சமயத்தினரும் தங்களது மோட்டார் வாகனங்களுக்கு கட்டாய இன்சூரன்ஸ் செய்ய வேண்டிய ஒரு நிறுவனத்தின் தலைவர் அரசு செலவில் ஒரு மதத்தைச் சார்ந்த கருத்தை பரப்பியது இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்ட மத சார்பின்மைக்கு விரோதம் என்பதால் அவ்வாழ்த்து அட்டை களை அனுப்பியதற்கான செலவை அக்கம்பெனி தலைவர் எஸ்.ஆர்.பொம்மை உள்ளிட்டவரிடமிருந்து வசூலிக்க வேண்டு மென்று கோரப்பட்டது.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் அவ்வழக்கை தள்ளுபடி செய்து மத சார்பின்மை என்பதற்கு ஒரு புதிய விளக்கத்தைக் கொடுத்தது. மத சார்பின்மை என்பது மதங்களுக்கு விரோதமானதல்ல, மாறாக அனைத்து மதங்களையும் அணைத்து செல்லும் அரசு என்று பொருள்படும். ஆனால் அத்தீர்ப்புக்கு சில மாதங்களுக்குப் பின் ஒன்பது நீதிபதிகளடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட் டுள்ள மத சார்பின்மை என்பது மதங்களைத் தள்ளி வைத்துள்ள அரசு என்று பொருள்படும் என்ற தீர்ப்பை வெளியிட்டது மகிழ்ச்சிக்குரியது.
Subscribe to:
Comments (Atom)
